Friday, August 26, 2016

என் இருப்புக்கென்ன பொருள்?



காலையிலெழுந்து மடிக்கணினியைத் திறந்தால்
நான்கு கட்டெறும்புகள் 
ஒரு டஜன் சின்னச் சிவப்பெறும்புகள்
பிள்ளையார் எறும்புகள் ஒரு மூட்டை
கலைந்தோடுகின்றன
சந்தேகமேயில்லை
பிள்ளையார் எறும்புகளின் கூட்டம்
நேற்றிரவு நடந்திருக்கிறது
கணினியின் கீபோர்ட் அடியில்
சிறப்பு அழைப்புப்
பேச்சாளர்களாகக் கட்டெறும்புகள்தாம்
இருந்திருக்கவேண்டும்
அவைதான் தலையுயர்த்தி
வெளிவருகின்றன கம்பீரமாக
எதிரிச் சிவப்பெறும்புகள்
கூட்டத்தில் கலகம் செய்ய வந்திருக்கும்
அயோக்கிய எறும்புகள் அவை
கடித்து வைக்கும் எனக்குப் பிடிக்காது
பிள்ளையார் எறும்புகள்
பாவம் அப்பாவிகள்
என் கைகளும் கால்களும்
அவற்றுக்காகவே கட்டி வைக்கப்பட்ட
நெடுஞ்சாலைகள் என்றெண்ணி
டோல் கட்டணம்கூட தராமல் ஊர்பவை
ஊர்வதைத் தவிர
வேறெதுவும் அறியாதவை
எதற்குக் கூட்டம் நடத்தியிருக்கும் இவை
என்ன தீர்மானங்கள் இயற்றியிருக்கும்
இப்போது
மண்டைக்குள் இவை
நுழைந்துவிட்டன குடைகின்றன
என்னை அழைக்கவில்லை
என் கணினிக்குள் கூட்டம் நடத்தியிருக்கிறீர்கள்
என்றால்
என் இருப்புக்கென்ன பொருள்?












(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

No comments: