Wednesday, April 27, 2016

மலைப்பாம்பு

 தினத்தந்தியில் அந்த மலைப்பாம்பையும் ஒரு பெண்ணையும் பற்றிப் போட்டிருந்தது. பத்தடி நீளம், முக்காலடி தாட்டி. கரும்பச்சை மஞ்சள் வளையங்கள் தோல் அலங்காரம் கொண்ட பாம்பு அது. சாதுப்பிராணியென்று அந்தப் பெண் வளர்த்து வந்தாள். சிலநாட்களாக சோர்ந்திருந்த பாம்பு இரவில் மெதுவாக ஊர்ந்து அந்தப் பெண்ணருகே அவள் படுக்கையில் நெருங்கிப் படுத்துக்கொண்டதாம். படுக்கையென்பதால் இங்கே படுத்தல் வினை. பெண் மன ஆதுரத்தோடு அதை அழைத்துக் (எடுத்துக்?) கொண்டு அதன் மிருக வைத்தியரிடம் காட்டியிருக்கிறாள். சோர்வெல்லாம் ஒன்றுமில்லை, உங்களை அளவெடுத்துக்கொண்டிருக்கிறது எப்போது திங்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறது என்றாராம் வைத்தியர். செய்தியைப் படித்த அன்று இரவில் படுக்கையில் படுத்தபடி பக்கத்தில் ஒருமுறை பார்த்தாள். தன்னை அளவெடுத்தால் ஒரு போடு போடவேண்டியதுதான் என்று முடிவெடுத்தபின் அவளுக்கு நிம்மதியான உறக்கம் வந்தது.

No comments: