Friday, January 18, 2013

“தளம்” முதல் இதழில் வெளிவந்த இரு கவிதைகள்


புருஷன்


அன்பு ஒன்று நேற்று அந்தியில் வந்தது என்முன்
ஒரு தலை ஆயிரம் ஆயிரமாக
கைகளும் கால்களும் தொடைகளும்
ஈராயிரம் ஈராயிரமாக
இன்னும் பலபாகமும் இன்பமும்
ஊற்றாக ஆறாக கடலாகப்
பல்கிப் பெருக
மூழ்கி மூச்சுமுட்டி
மூடிவிட்டேன் கண்ணை.
ஒரு கணம்தான்.
ஒன்றுமில்லை எதிரில்.
ஒளிந்துகொண்டிருக்குமோ?
ஓடிப்போயிருக்குமோ?
சுற்றிப்பார்த்துவிட்டேன்.
கதவுகள் சன்னல்கள் மூடியே இருந்தன.
என் கண்களும் காதுகளும்கூட அந்தந்த இடங்களில்தாம்.
தொட்டுப்பார்த்தும் விட்டேன்.
அது இருந்த இடத்தில்
அரவம் இல்லை சலனம் இல்லை தடயம் இல்லை.
மின் தடையால் இணையம் நின்றுவிட்டிருந்ததை
உணர்ந்தேன் சற்றைக்குப் பின்.

****  

(திபெத்திய) இறந்தவர்களின் புத்தகத்திலிருந்து 


இறப்பில் காத்திருந்தடையும்
வெண்ணொளி வெறிக்கக்கூசி
விழிகள் பஞ்சடைய
இங்குமங்கும்
அன்றும் பிறகும் என்றும்
தடுமாறி அல்லலுறுமுன்

இரு நிகழ்வுகளுக்கிடை
இரு நினைவுகளுக்கிடை
கனவுக்கும் விழிப்புக்குமிடை
மின்னாதுமின்னும் அவ்வப்
பொழுதின் குழந்தை ஒளித்துளிக்கு
விழிகளுனதை ஈகையிட்டுப்பழகு.

ஒன்றிலிருந்து இரண்டும்
ஈராயிரமும் லட்சமும் லட்சத்துக்
கோடிகளுமாகி
தானற்றுப்
பல்கும்
தன்
கமலம்
விரியும்.


3 comments:

Unknown said...

அன்பின் பெருந்தேவி,

டைனோ பாய் (dyno buoy) அவர்கள் மூலம் நீங்கள் நாட்டார் தெய்வங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக அறிந்தேன். என் மாமனார் முனைவர். இரா.காசிராசன், மதுரைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இப்போது ராச்சஸ்டர் நியூயார்க்கில் உள்ள எங்கள் இல்லத்தில் இருக்கிறார். அவருக்கு தமிழ் folkloreல் ஈடுபாடு அதிகம். உங்களைப் பற்றி டைனோ வீட்டில் அறிந்ததும் உங்களுடன் தொடர்பு ஏற்படுத்தித் தருமாறு கேட்டார். அவருக்கு கணினி இன்னமும் கைவரவில்லை. ஆகவே நான் மடலிடுகிறேன்.

நீங்களும் ராச்சஸ்டரில் இருப்பதாக டைனோ சொன்னார். உண்மையா? உண்மையெனில் உங்களைச் சந்திக்க விருப்பம். பதிலிடவும். நன்றி.

அன்புடன்,

தினேஷ் குமார் (எ) முகிலன்.

Unknown said...

அன்பின் பெருந்தேவி,

டைனோ பாய் (dyno buoy) அவர்கள் மூலம் நீங்கள் நாட்டார் தெய்வங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக அறிந்தேன். என் மாமனார் முனைவர். இரா.காசிராசன், மதுரைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இப்போது ராச்சஸ்டர் நியூயார்க்கில் உள்ள எங்கள் இல்லத்தில் இருக்கிறார். அவருக்கு தமிழ் folkloreல் ஈடுபாடு அதிகம். உங்களைப் பற்றி டைனோ வீட்டில் அறிந்ததும் உங்களுடன் தொடர்பு ஏற்படுத்தித் தருமாறு கேட்டார். அவருக்கு கணினி இன்னமும் கைவரவில்லை. ஆகவே நான் மடலிடுகிறேன்.

நீங்களும் ராச்சஸ்டரில் இருப்பதாக டைனோ சொன்னார். உண்மையா? உண்மையெனில் உங்களைச் சந்திக்க விருப்பம். பதிலிடவும். நன்றி.

அன்புடன்,

தினேஷ் குமார் (எ) முகிலன்.

Perundevi said...

Dear Mugilan,

Thanks for the message. I am presently in Chennai and will be back to USA by August 23 or so. I will contact you once I am back. Please give me your email ID so that I can send you my phone number. My regards to your father-in-law and Dyno.
Perundevi