Friday, December 2, 2011

க்ராஸ்டாக்

(அல்லது குறுக்குச்சால்)

இப்படித்தான்
அன்னைக்கி ஆத்தில என்ன நடந்ததுனா
சைக்கிள் காரு மீனுக்கில்லை காலு
பர்ஸ்ட் க்ளாஸ் பாட்டு போட்டான்யா
ஓரம்போவில கருமத்தைப் பேசாதே
சிரித்து சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
ஆஹஹா
பொம்பளை சிரிச்சாப்போச்சு
சிரிப்பா சிரிச்சிரும் கதை அப்புறம்
கதைக்கு காலு கை முளைச்சி
ஆண்குறியும் பெண் அதிகாரமும்
வெவ்வேற வீடுகளுக்குப் போவது தான்
கலசம், அரசி, கோலங்கள்
ஏழைகளின் வாழ்வில் விளக்கேற்றுவோம்
வா மானாடி மயிலாடி
அய்யா ஏற்கெனவே திட்டிப்புட்டாரு
கையை காலை வச்சுக்கிட்டு சும்மா
இருக்கமாட்டீங்களா
பட்டாணி சுண்டல் சுக்குக்காப்பி
சரி சரிச் சும்மா டைம்பாஸுக்கு
சனியனே மேட்ச் பாக்கிறப்ப
உயிரை வாங்காதே
பிடிக்குங்களா
காலிப்ளவர் பக்கோடா
பக்கார்டி ரம்மோடு
பொறந்தா தமிழ் எழுத்தாளரா
பொறக்கணும்
பொரவலர் கிடைக்க
என்னுயிரே என்னுயிரே
மகளின் போனில் ரிங்டோன்
டிங் மெசேஜா வருதே
எந்தப் பொறுக்கி அது
ஏன் மூட்டுவலி இப்பல்லாம் வருது
கோப்பையிலே என் குடியிருக்கும்
அவன் யாரு சார் மகா கவிஞன்
இப்பல்லாம்
இன்னாத்த எழுதிக்கிழிக்கிறாங்க
மூத்திரம் முலை பத்தாததுக்கு
உடல் அரசியல்
கோஷ்டி அலையுது அவுங்களும்
கல்கி படிச்சி கவுந்தவங்க தான்
சார்
வந்தியத்தேவனை குந்தவை
மல்லாக்கவா யாருக்குத்
தெரியும் ஷகீலாவின் கண்ணீர்
மிகப்பெரிய பெரிசு தான்
ஆமாமாம் மிகப்பெரிய
கோப்பைகளையே நிரப்பப்
பற்றாது அஸிஸ்டெண்ட் டைரக்டரு
பேசினா என்ன துப்பினாகூட
மார்க்வெஸ் தான்
நடிகைகளின் வாழ்க்கைகள்
துயரப்பொதிமூட்டைகள் என்கிற
மானுடவியல் ஆய்வைச்
செய்த அமெரிக்க மாணவி
படுபேஜார்டி
கண்ணீரால் ஆய்வறிக்கையை
எண்ணூறு பக்கம் நிரப்பினாள்
தி ஹிந்து இலக்கியத் துணையிதழ்
படிச்சிட்டு இன்னிக்கு
வாழ்வாங்கு வாழ்ந்தப்புறம்
அதான்ப்பா அதேதான்
குப்புறப்படுத்துட்டு
நாளைக்காலையில்
சுனாமி வருமா
என மாற்றத்தை எதிர்நோக்கும்
உங்கள் அன்பன்.

****

(உலோகருசி கவிதைத்தொகுப்பிலிருந்து, காலச்சுவடு இதழிலும் பிரசுரிக்கப்பட்டது, மீள்பதிவு இங்கே)

No comments: